October 27, 2018 தண்டோரா குழு
நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் நடிகர் அர்ஜுன் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமூக ஊடங்களில் #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள்,குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. ஹாலிவுட்டில் பிரபலமாக துவங்கிய இந்த விவகாரம் தற்போது இந்தியாவில் டிரெண்டாகி வருகிறது.
இதற்கிடையில்,பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.நடிகர் அர்ஜூன் உடன் ‘விஸ்மயா’ என்னும் திரைப்படத்தில் நடித்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.இதையடுத்து,சுருதி ஹரிகரன் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருந்தார்.“நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. சுருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள்” என்று அவர் விளக்கம் அளித்து இருந்தார்.
இதனைத்தொடர்ந்து நடிகர் அர்ஜூன் தமது திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும்,புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில்,குற்றம்சாட்டிய நடிகை சுருதி ஹரிகரனுக்கு எதிராக பெங்களூர் நகர் சிவில் நீதிமன்றத்தில் ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.
இந்நிலையில்,’விஸ்மயா’ படத்தில் நடித்த போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் நடிகர் அர்ஜுன் மீது 354 ஏ,509,506,354 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.