October 1, 2018
தண்டோரா குழு
ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு காணொளி இன்று வெளியிடப்பட்டது.
பிங்க் மாதம் என அழைக்கப்படும் அக்டோபர் மாதம் வருடந்தோறும் உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.இந்த வருடம் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனரான டாக்டர்.குகன்,ஒரு புதிய தொழில் நுட்பத்தை கொண்டு உலகிலேயே முதல் முறையாக அனிமேட்டட் வீடியோ எனப்படும் அசைவூட்டப்பட்ட காணொளியை உருவாக்கி உள்ளனர்.
இதன் வாயிலாக மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு எளிதாக புரியும் வகையில் விளக்கி உள்ளனர்.பொள்ளாச்சி மாவட்ட துணை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இந்த வீடியோவை வெளியிட்டார்.மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள்,புற்று நோய்க்கான பரிசோதனைகள்,இதற்கான சிகிச்சைகள்,தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
இந்த விழிப்புணர்வு சேவையை அனைவருக்கும் தெரியப்படுத்த அந்த வீடியோவில் வரும் கதாபாத்திரங்கள் படம் கொண்ட ‘Standies’ எனப்படும் நிற்கும் படங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு கையேடுகளை கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள் மூலம்,பல்வேறு மாவட்டங்களில் பொது மக்களுக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ராமகிருஷ்ணா புற்று நோய் சிகிச்சை மையத்தில் 25 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக மோமோகிராம் செய்து தரப்பட ஏற்பாடு செய்துள்ளனர்.