November 22, 2018
தண்டோரா குழு
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் 3 வயதுப் பேரனுக்கு 18 கோடியே 71 இலட்ச ரூபாய் சொத்துமதிப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கு தேச கட்சி தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்த 8 வருடங்களாக ஆண்டு தோறும் தனது சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார்.இந்த ஆண்டுக்கான சொத்து மதிப்பை சந்திரபாபு நாயுடுவின் மகன் நரா லோகேஷ் விஜயவாடாவில் நிருபர்கள் சந்திப்பில் இதை வெளியிட்டார்.
அதன்படி சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 81.83 கோடி ஆகும்.கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 12.55 கோடி அதிகம்.கடந்த ஆண்டு சொத்து மதிப்பு ரூ.69.28 கோடியாக இருந்தது.இதில் சந்திரபாபு நாயுடுவுக்கு மட்டும் ரூ.8.30 கோடிக்குச் சொத்து உள்ளது.அவருக்குக் கடன் ரூ.5.31 கோடி உள்ளது.இதனால் நிகர சொத்தின் மதிப்பு ரூ.2.99 கோடியாகும்.சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஷ்வரிக்கு ரூ.31.01 கோடி சொத்து உள்ளது. இவருக்கு ரூ.22.25 கோடி கடனும் இருக்கிறது.ஆந்திர தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ள நரா லோகேஷ் ரூ.21.40 கோடிக்கு சொத்து வைத்துள்ளார்.கடந்த ஆண்டு இவரின் சொத்து மதிப்பு ரூ.15.14 கோடியாக இருந்தது.லோகேஷின் மனைவி பிரமினியின் சொத்து மதிப்பு ரூ.15.01 கோடியில் இருந்து 7.72 கோடியாகச் சரிந்துள்ளது.அதேவேளையில் பிரமினியின் கடன் ரூ.36.14 கோடியில் இருந்து 5.66 கோடியாகக் குறைந்துள்ளது.
இதில் ஆச்சரியாமான விஷயமே சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரனுக்கு அதிகமான சொத்து இருப்பது தான்.சந்திரபாபு நாயுடுவின் பேரன் நரா தேவனேஷ் பெயரில் ரூ.18.71 கோடிக்குச் சொத்து உள்ளது.நர லோகேசின் மகனும் சந்திரபாபுவின் பேரனுமான 3வயது தேவன்சின் சொத்துமதிப்பு 18 கோடியே 71 இலட்ச ரூபாயாகும்.நாட்டிலேயே அதிக சொத்து கொண்ட முதல்வராக சந்திர பாபு நாயுடு அறியப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.