October 26, 2018
தண்டோரா குழு
நாம் எந்த பாதையில் போனாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.அண்மையில்,கட்சிக்கான பணிகள் 90 சதவிகிதம் முடிந்துவிட்டது,நேரம் பார்த்து கட்சி பற்றி ஆரம்பிப்பேன் என ரஜினி கூறியிருந்தார்.இதற்கிடையில்,ரஜினி மக்கள் மன்றத்தின் கட்டுப்பாடுகளை மீறி ஊடகங்களில் விவாதங்களில் பங்கேற்ற 15 பேரை அகில இந்திய ரஜினி காந்த் ரசிகர் மன்றத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 3 தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த்,ரசிகராக இருப்பது மட்டும் கட்சியில் முக்கிய இடம் பிடிக்க போதுமான தகுதி இல்லை.நல்லது செய்யும் நோக்கத்தோடு பணம்,பதவி ஆசை இல்லாமல் வரும் பொதுமக்களுக்கும் கட்சியில் இடம் கொடுக்க வேண்டும்,மன்ற நிர்வாகிகள் நீக்கம் அனைத்தும் என் பார்வையில் தான் நடைபெற்றது எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில்,நடிகர் ரஜினிகாந்த் இன்று நிர்வாகிகளுடன் ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார்.இதனைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கடந்த அக்டோபர் 23ஆம் தேதி மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லியிருந்தேன்.நான் கூறியது கசப்பானதாக இருந்தாலும் அதில் உள்ள உண்மை,நியாயத்தை புரிந்து கொண்டதற்கு என் மனமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.உங்களைப் போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும் உங்களையும் யாராலும்,எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.நாம் எந்த பாதையில் போனாலும்,அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்”. இவ்வாறு தெரிவித்துள்ளார்