May 14, 2018
தண்டோரா குழு
காவிரி பிரச்னையில் நம்முடைய ஒற்றுமையை நாம் காட்டியே ஆக வேண்டும் என மக்கள் நீதி மைய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியமா? குழுவா? அல்லது முகமையா? என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசு விளக்கம் கேட்டது.இதையடுத்து மாநிலங்களுடன் வரைவு செயல் திட்டத்தை பகிர்ந்து கருத்துக்களை கேட்டறிய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதுடன் வழக்கை வருகிற புதன்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.
இந்நிலையில்,சென்னையில் நடிகர் கமல்ஹாசன் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய கமல்ஹாசன்,
காவிரி உரிமையை படிப்படியாக இழந்து வருகிறோம்.தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை மிக மிக அவசியமானது.காவிரி விவகாரத்தில் தமிழர்களாகிய நமது ஒற்றுமையை நாம் காட்டியே ஆக வேண்டும்.மக்களின் பிரச்னை என்பதால் கட்சிகளை தாண்டி ஒன்றாக நிற்க வேண்டும்.காவிரி விவகாரம் தொடர்பாக கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் வரும் 19-ம் தேதி காவிரி உரிமை கூட்டம் நடைபெறும்.இக்கூட்டத்தில் கட்சிகளை கடந்து இளைஞர்கள்,ஆர்வலர்கள் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.காவிரி பிரச்னையில் உரிய நீதி கிடைக்க கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைந்தவுடன்,முதலமைச்சரை சந்திக்க தயாராக உள்ளோம் என்று கமல்ஹாசன் கூறினார்.