November 19, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்ட பெண் ஊடகவியலாளர்கள் சார்பில் ஊடகத்துறையில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவையில் இன்று நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பணிபுரியும் இடத்தில் பெண் மறுக்கும் போது அவரின் விருப்பத்திற்கு எதிராக ஆண் ஒருவர் அவரை தொட முயற்சித்தாலோ, உடல்ரீதியாக நெருங்க முயற்சித்தாலோ,பாலியல் ரீதியான கருத்துகளை சொன்னாலோ பெண்கள் என்ன செய்யவேண்டும் பெண்கள் பாதுகாப்புகாக என்ன மாதிரியான நடவடிக்கைள் எடுக்க வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.இதில்,சிறப்பு விருந்தினராக சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
“ஊடகத்துறையில் நாளுக்கு நாள் பெண்கள் அதிகரித்து கொண்டு போகின்றனர்.ஊடகத்துறையன்றி அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் ரீதியான வன்கொடுமை தொடர்ந்து நடந்து வருகிறது.இதற்கு முடிவு காணும் நோக்கத்தில் இதை எதிர்த்து சி.பி.எம் சார்பில் குரல் கூடுத்து வருகிறோம்.பெண்கள் அன்றாடம் அவர்களது வாழ்கையில் அலுவலகம்,நிறுவனம்,பொது இடங்களில் சந்திக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமைகளை முன்வந்து சொல்லவதில்லை.தற்கு காரணம் ஒருவித தயக்கமும் பயமும் தான்.
ஆனால் கடந்த சில தினங்களாக பெண்கள் தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தலை சம்பந்தப்பட்டவரின் பெயருடன் மீடூ இயக்கம் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.பாலியல் துன்புறுத்தல் பற்றி பெண்கள் சமூக ஊடகங்களில் எழுதுவது தீர்வாகுமா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் உண்டு.ஆனால் பெண்கள் முன்வந்து தங்களுக்கு நடந்த பிரச்சனைகளை தற்போது மீடூ முலம் பேச தொடங்கி உள்ளனர் என்று சொல்லலாம்
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013ன் படி,அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் பற்றி புகார் தெரிவிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.பத்து ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும்,அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விசாகா கமிட்டியின் தலைவராக பெண் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என்பது விதி.கமிட்டியில் மொத்த உறுப்பினர்களில், 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.ஓரு உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல்,தன்னார்வ தொண்டு அமைப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.விசாகா கமிட்டி அமைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.
இந்த சட்டம் இருந்தும்கூட இன்னும் பல நிறுவனத்தில் விசாக கமிட்டி இதுவரை அமைக்கப்படவிலை என்பதே வேதனைக்குரிய ஒன்று.இதனை அனைத்து அலுவலகத்திலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இதனை தொடர்ந்து ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல்ரீதியான வன்கொடுமைகள் அலுவலகத்தில் ஏற்ப்படும் பிரச்சனைகள் பற்றி கேட்டு அறிந்துகொண்டார்
ஊடகத் துறையில் பணிபுரியும் பெண்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்கள் சந்திக்கும் சவால்களுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும்” என்றார்.