October 22, 2018
தண்டோரா குழு
கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிஷப் பிராங்கோ மூலக்கல்லுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் குரியாகோஸ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட் கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் தன்னை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக பணியாற்றிய பிராங்கோ மூலக்கல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.எனினும் இந்த புகாரை பிராங்கோ மூலக்கல் மறுத்தார்.
இதையடுத்து,அவரை கைது செய்ய வலியுறுத்தி கேரளாவில் கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால்,அவரை கேரளாவுக்கு வரவழைத்து தனிப்படை போலீசார் பல நாட்கள் விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தனர்.நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்ட பின்னர் கோட்டயத்தில் உள்ள பாலா ஜெயிலில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இதற்கிடையில்,தனக்கு ஜாமீன் வழங்க கோரி பிராங்கோ கேரள உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இம்மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் பிராங்கோ மூலக்கல் கேரளாவுக்குள் நுழையக் கூடாது,அவர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்,சாட்சியங்களை கலைக்கக் கூடாது, 2 வாரத்திற்கு ஒரு முறை விசாரணை அதிகாரிகள் முன்பு அவர் ஆஜராக வேண்டும் என்ற கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில்,பிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் குரியாகோஸ் மரணம்டைந்தார்.கேரளாவைச் சேர்ந்த குரியாகோஸ் பஞ்சாப்பில் உள்ள தனியார் விடுதியில் இறந்து கிடந்தார்.இவர் ஏற்கனவே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.