April 8, 2019 தண்டோரா குழு
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் 8 வழிச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம் வகுத்தது. சென்னை — சேலம் இடையிலான 8 வழிச்சாலை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சுமார் 270 கிமீ சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி செலவிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த 8 வழி சாலைக்கு சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் 1,900 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட கோரி 5 மாவட்ட விவாசாயிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த திட்டத்துக்கு தடை கேட்டும், திட்டத்தை ரத்து செய்ய கோரியும் சென்னை ஐகோர்ட்டில், விவசாயி கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி எம்.பி. அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சுமார் 6 மாதங்களாக நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த திட்டத்திற்காக 5 மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த தடை விதித்து ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர். மேலும் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து
கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை இன்று வெளியிட்டனர்.அதில், சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை கேட்டு விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவித்தனர்.