February 23, 2020 தண்டோரா குழு
கோவையில் வீட்டில் கலர் பிரிண்டர் வைத்து கள்ளநோட்டுகள் அடித்த மூன்று பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.3.64 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சரவணம்பட்டி போலீசார் நேற்று இரவு மணியக்காரன் பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மணியகாரம்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை அழைத்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்களை சோதனையிட்டபோது 200 ரூபாய் நோட்டு கட்டுகள் மூன்று கொண்ட 60 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருந்தனர். அந்த பணத்தை போலீசார்வாங்கி பார்த்தபோது சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அவர்களிடம் விசாரித்த பொழுது அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை நடத்தினர் . விசாரணையில் பிடிபட்ட நபர்கள் வட பள்ளியைச் சேர்ந்த சுலைமான் என்பவரின் மகன் கிதர் முஹம்மது (66) மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவரின் மகன் மகேந்திரன் (39) என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் தடாகம் ரோடு திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த சூரியகுமார் (30) என்பவர் இந்த நோட்டுகளை தயாரித்து தந்ததாக கூறினர். தொடர்ந்து திருவள்ளுவர் நகரில் உள்ள சூரியகுமாரின் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு கள்ள நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர் பிரிண்டர் மெஷின் மற்றும் லேமினேஷன் கருவிகளையும் தயாரித்து வைத்திருந்த இரண்டு லட்சத்தி 64 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர் .