November 19, 2018
த.விக்னேஷ்
திருமணமான அனைத்து தம்பதியினரும் ஆசையோடும், ஆவலோடும்,எதிர்பார்ப்பது கருத்தரித்தல் கர்ப்பம் ஆவது தான்.திருமணம் ஆனா பெண்கள் அவர்கள் கர்ப்பம் ஆனதை உறுதி செய்தால் அவர்களுக்கு இந்த உலகில் அதைவிட பெரிய ஆனந்தம் இருக்கவே முடியாது.அந்த கால கட்டங்களில் அவர்களின் கணவர்,பெற்றோர் மற்றும் அனைத்து உறவினர்களும் மிகவும் அன்புடனும்,கவனமுடனும், பாதுகாப்புடனும் பார்த்துக் கொள்வார்கள்.
பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிக கவனத்துடன் இருப்பது மிகவும் அவசியம்.அவர்கள் செய்யும் எந்த ஒரு தவறு குழந்தையை பாதிக்ககூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருப்பார்கள்.மேலும் கர்பிணி பெண்கள்,வேகமாக நடக்கக் கூடாது, ஓடக்கூடாது,பாரங்கள் தூக்கக் கூடாது,போன்ற பல அறிவுரைகளைக் கூறி அவர்களை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்வார்கள்.இந்நிலையில் கோவையை சேர்ந்த சியாமா ரிது வர்ணன்(30) என்ற பெண்மணி 6 மாத கர்பத்தின் போதே ஜும்பா என்ற நடன பயிற்சி அளித்து வருவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
“நான் ஒரு பேஷன் டிசைனர்.எனது கணவர் ரிது வர்ணன்(34) ஒரு தடகள வீரர்.எனக்கு சிறுவயது முதலே நடனத்தில் ஈடுபாடு மிக அதிகம். நான் ஒரு கிளாசிக்கல் டான்சர்.எனக்கு 2010-ல் திருமண ஆன பிறகு நடனத்தை விட்டுவிட்டேன்.எனக்கு முதல் குழந்தை பிறந்த பிறகு எனது உடல் எடை 58 கிலோவிலிருந்து 86 கிலோவாக அதிகரித்து விட்டது.இதனால் நான் மிகவும் சிரமப்பட்டேன். உடல் எடையை குறைப்பதற்கு பல வகையான உணவுகட்டுப்பாடு,உடற்பயிற்சி,ஜிம் மற்றும் யோகா என அனைத்தையும் செய்து பார்த்து விட்டேன் ஒன்றும் பயனளிக்கவில்லை. நான் ஜும்பா நடனம் பற்றி கேள்விப்பட்டேன்.அது ஒரு உடற்பயிற்சி மாதிரியான ஒரு டான்ஸ் என்பதால் நான் பயிற்சி எடுத்தேன். அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது.நாம் டான்ஸ் கிளாஸ்க்கு போனால் சரியாக போகமாட்டோம்,எனவே நாமே ஜும்பா டான்ஸ் கிளாஸ் எடுத்தால் முறையாக பயிற்சி எடுத்த மாதிரியும் இருக்கும்,அதே நேரத்தில் பயிற்சி கொடுத்த மாதிரியும் இருக்கும் என்று ஆரம்பித்தது தான் இந்த ஜும்பா டான்ஸ்.
நான் கர்ப்பம் ஆனதால் நடனத்தை தொடர முடியுமா என்று சந்தேகம் எழுந்தது.இதனையடுத்து 3-க்கும் மேற்பட்ட மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகே எனது நடனப்பயிற்சியை தொடர்ந்தேன். நான் கருவுற்ற முதல் நாளில் இருந்தே நடனத்தை தொடர்ந்து ஆடிவருகிறேன்.இப்போது 6 மாத கர்பமாக இருக்கிறேன். 9 மாதம் வரை நடனத்தை தொடர்வேன். கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியிலுள்ள என்.எப்.எஸ் டான்ஸ் கிளாஸ் மற்றும் ஆர்.எஸ் புரத்திலுள்ள டி.எஸ்.ஏ டான்ஸ் அசோசியேசனில் கிளாஸ் எடுத்து வருகிறேன்.தற்போது நான் 80க்கும் மேற்பட்டோருக்கு ஜும்பா நடன பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறேன்.இந்தியாவிலேயே நான் தான் முதல் முறை இப்படிப்பட்ட ஒரு முயற்சியை எடுத்துள்ளேன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.என்னுடைய இந்த முயற்சியை ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு அனுப்பியுள்ளேன் நிச்சயம் எனக்கு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எனது இந்த முயற்சிக்கு பல தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.எனது முதல் பிரசவம் சிசேரியன் தான். இந்த டான்ஸ் பயிற்சியின் மூலம் எனக்கு சுகபிரசவம் ஆகும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. கர்பிணி பெண்கள் கருவுற்ற காலங்களில் இது மாதிரியான நடனத்தை மேற்கொள்வதற்கு முன்பாக மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெற்ற பிறகே பயிற்சி எடுக்க வேண்டும்.என்னுடைய இந்த முயற்சிக்கு எனது கணவர் ரிது வர்ணன் பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளார்.எங்களுடைய இலக்கு கர்ப்ப காலத்தில் பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். கடினமான எந்த வேலையும் செய்யக் கூடாது என்ற நிலை மாறி பெண்கள் அனைத்து வேலைகளையும் செய்யலாம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நோக்கமாகும் என்றார்.