November 20, 2018
தண்டோரா குழு
கோவை உற்பத்தி திறன் குழு மற்றும் இந்திய தரவட்ட குழுவின் சார்பில்,தரமே தனித்துவத்தை தரும் எனும் தலைப்பில் கருத்தரங்கம் இன்று கோவையில் நடைபெற்றது.
கோவை ஆவராம்பாளையம் கோ இண்டியா அரங்கில் கோவை உற்பத்தி திறன் குழுவின் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் முன்னாள் தலைவரும் ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனருமான கவிதாசன் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் உற்பத்தி திறன் குழுவின் தலைவர் நடராஜன் பேசுகையில்,தொழில் வளர்ச்சிக்கு,தரத்தை தக்க வைப்பதிலும்,மேம்படுத்துவதிலும்,அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் நடத்தப்படும்,தர மேம்பாடு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று அனைத்து தொழில் துறையினரும் பயனடைய வேண்டும் என்றார்.
இதனைதொடர்ந்து பேசிய இந்திய தர வட்ட குழுவின் கோவை கிளை இயக்குனர் சங்கரசுப்ரமணியம்,குறைந்த விலையில்,அதிநவீன தொழில்நுட்பம்,சிறந்த தரத்துடன் பொருட்களை உற்பத்தி செய்தால் மட்டுமே,தொழில்துறையில் சர்வதேச அளவில் இந்தியா சிறந்து விளங்க முடியும்.இதற்கு மத்திய,மாநில அரசுகள் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கோவை தொழில் துறையில் நவீன தொழில் நுட்பத்தின் பங்கு,தரத்தில் தொழிலாளர்களின் பங்கு,என பல்வேறு தலைப்புகளில் தொழில் துறையினர் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.