March 11, 2026
தண்டோரா குழு
சூயஸ் நிறுவனம் தனது திட்ட வளாகத்தில் குளோரின் கசிவை நிர்வகிப்பதற்கான சிறப்பு அவசரகால மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தியது.
55வது தேசிய பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ரசாயன அவசர காலங்களில் உடனடியாக எப்படிச் செயல்படுவது என்பதைச் சோதிக்கவும் மேம்படுத்தவும் இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை அதிகாரிகளுடன் இணைந்து நடத்தப்பட்டது.
ரவிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில், கணபதி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஒரு சிறப்புக்குழு தண்ணீர் வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு வந்து, அதிக அழுத்தத்தில் கசிவு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாகச் செய்துகாட்டினர்.
இது வெறும் பெயரளவிலான பயிற்சியாக இல்லாமல், இது போன்ற அவசர காலங்களில் கசிவைக் கட்டுப்படுத்தத் தேவையான தைரியத்தையும், மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான சரியான வழிமுறைகளையும் இந்தக் குழுவினர் செயல்முறை விளக்கம் மூலம் செய்து காட்டினர்.இந்தப் பயிற்சியின் போது, பாதுகாப்பு உபகரணங்களை எவ்வாறு கையாளுவது என்பதை தீயணைப்பு வீரர்கள் தொழிலாளர்களுக்குக் கற்றுக் கொடுத்தனர்.
மேலும்,பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான சரியான வழிமுறைகளையும் அவர்கள் செய்து காண்பித்தனர்.ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதில் உள்ள தங்கள் அர்ப்பணிப்பை இந்தக் குழு வெளிப்படுத்தியது.
இது குறித்து சூயஸ் – கோயம்புத்தூர் 24×7 குடிநீர் வழங்கல் திட்டத்தின் பாதுகாப்பு மேலாளர் பங்கஜ் குமார் கூறுகையில்,
ஆபத்தான சூழ்நிலைகளில் பாதுகாப்பு நடைமுறைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதை எங்கள் ஊழியர்கள் அறிந்து கொள்வதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது போன்ற மாதிரி ஒத்திகைகள் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வையும், தயார் நிலையையும் அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இது போன்ற வழக்கமான பயிற்சிகள், தீயணைப்பு போன்ற அவசரகால சேவைகளுடனான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், குளோரின் கசிவு போன்ற ரசாயன அவசர காலங்களில் விரைவாகவும் திறமையாகவும் செயல்படவும் உதவுகின்றன என்றும் அவர் கூறினார்.சூயஸ் நிறுவனத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்பு மேலாளர் பிரகாஷ் கூறுகையில், எங்கள் ஊழியர்கள் மற்றும் சுற்றியுள்ள மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு மிகவும் முக்கியமானது.
குளோரின் கசிவு மாதிரி ஒத்திகையை நடத்துவதற்கு சிறந்த ஆதரவளித்து, தீவிரமாகப் பங்கேற்ற தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.55வது தேசிய பாதுகாப்பு வாரத்தில் இந்த ஒத்திகையை ஏற்பாடு செய்தது, பணியிடங்களில் சிறந்த பாதுகாப்புத் தரங்களைப் பேணுவதற்கான நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
இந்தப் பயிற்சி வால்வுகளை மூடுவது போன்ற தொழில்நுட்ப விஷயங்களைப் பற்றியது மட்டுமல்ல;அவசர நிலை ஏற்படும்போது யாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவரும் அறிந்துகொள்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.