June 25, 2018
தண்டோரா குழு
கோவையில் குடிநீர் பணியை தனியார் நிறுவனத்துக்கு அளித்துள்ளதற்கு திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிறந்த சுவையுள்ள சிறுவாணித் தண்ணீரை அருந்தும் வாய்ப்பு கோயம்புத்தூர் மாநகர மக்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் சுயஸ் என்ற நிறுவனத்திற்கு கோவைக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை, கடந்த பிப்ரவரி மாதம் ரூ.3,150 கோடிக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த தகவலை அந்த நிறுவனம் தனது இணையதளப் பக்கத்தில் பெருமையுடன் வெளியிட்டுள்ளது.
டெல்லி மாநிலத்தின் மாளவியா மாவட்டத்தை தொடர்ந்து, குடிநீர் வழங்கிட இந்தியாவில் இரண்டாவது பெரிய உரிமத்தைப் பெற்றிருக்கிறோம் என்று அந்த தனியார் நிறுவனம் மார் தட்டிக்கொள்கிறது. இனி எதிர்காலத்தில், கோவை மாநகர மக்கள் தங்கள் குடிநீர்த் தேவைக்கு இந்த தனியார் நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி, அதன் தயவை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உருவாகும் அபாயம் உள்ளது.இதற்குமுன், பொலிவியா நாட்டில் கொச்சபம்பா நகரில் செமப்பா என்ற தனியார் நிறுவனத்திடமும் அதன்பிறகு இந்த சுயஸ் நிறுவனத்திடமும் குடிநீர் வழங்கிட உரிமம் வழங்கப்பட்டபோது, கட்டணம் செலுத்தினால் மட்டுமே குடிநீருக்கான அட்டை வழங்கப்பட்டு, அதனை இயந்திரத்தில் செருகினால்தான் தண்ணீர் பெற முடியும் என்ற சிக்கலான நிலை உருவானது. காசு இல்லாதவர்களுக்கு தாகம் தீர்த்துக் கொள்ள சொட்டுத் தண்ணீர்கூட கிடையாது என்ற நிலைமையும் ஏற்பட்டது என்கிறார்கள் சர்வதேச இயற்கை ஆர்வலர்கள்.
அதுமட்டுமின்றி, ஆற்று நீர், ஆழ்குழாய் மூலம் எடுக்கப்படும் நீர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு சுயஸ் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நெருக்கடி உருவானது. மழை நீரை பயன்படுத்தக்கூட கெடுபிடிகள் காட்டப்பட்டதால், மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் வெடித்து, பொலிவியா நாட்டைவிட்டு சுயஸ் நிறுவனம் விரட்டப்பட்டுள்ளது.இப்படிப்பட்ட நிறுவனத்திற்கு, அதிமுக அரசு கோவை மாநகரத்திற்குக் குடிநீர் வழங்கும் உரிமத்தை மாநகரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு விற்றிருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.