September 29, 2018
தண்டோரா குழு
5 கோடி ஃபேஸ்புக் கணக்குகளின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டிருக்கக்கூடும் என்ற அதிர்ச்சிகரமான தகவலை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலகில் 223 கோடி பேரால் பயன்படுத்தப்படுகிறது ஃபேஸ்புக் சமூக வலைதளம். இதில் பதியப்படும் பதிவுகள் சமூகத்தில் பல்வேறு தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியது.சமூக வலைத்தளங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் ஃபேஸ்புக் நிறுவனம், அதைப் பயன்படுத்துபவர்களின் கணக்குகள் செயல்படும் முறையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கண்டுபிடித்துள்ளது.
இது குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் கூறுகையில்,
கடந்த செப்டம்பர் 16-ம் தேதியில் இருந்து, ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததை பொறியாளர்கள் ஆராய்ந்தனர். அப்போது பேஸ்புக்கின் பயனாளர்கள் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என தெரியவந்ததது. உடனடியாக வியாழன் அன்று சரி செய்யப்பட்டது. பயனாளர்கள், தங்களது புரோபைல் பக்கத்தை மற்றவர்கள் எப்படி பார்க்க வேண்டும் என அமைக்கும் வியூ ஏஸ்( View as) என்ற முறையை பயன்படுத்தி ஹேக்கர்கள் ஊடுருவியுள்ளனர். எனினும் ஊடுருவல் காரணமாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது இதுவரை தெரியவில்லை. பயனாளர்களின் தகவல்கள், செய்திகள் எதையும் திருடியதாக தகவல் இல்லை. ஹேக்கர்கள் ஊடுருவல் காரணமாக பயனாளர்களின் தகவல்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு நடந்து வருகிறோம். பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.