September 23, 2019
நீர் இறக்க நோயால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு தவறான இடத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ள தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஒன்னிபாளையம் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் பாலகிருஷ்ணன். இவருக்கு பைந்தமிழ் செல்வி என்ற மனைவியும், தீபேஷ் என்ற 3 வயது குழந்தையும் உள்ளது. இவரது குழந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீரறக்க நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோவை துடியலூர் பகுதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு , 35 ஆயிரம் ரூபாய் செலவில் நீர் இறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டும் குழந்தைக்கு மீண்டும் நீர் இறக்கம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை பரிசோதித்த குழந்தை நல மருதுவர்கள், குழந்தைக்கு தவறான இடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறியதாக தெரிகிறது. இதனால் தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி குழந்தையுடன் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தவறான இடத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் தற்போது 3 வயது குழந்தைக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியநிலைக்கு தள்ளப்படடிருப்பதாகவும் பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.
குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு, உதவிட கோரியும், தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலிறுத்தினர்.