April 8, 2019 தண்டோரா குழு
2014 – 19 காலகட்டம் இந்தியாவின் சரித்திரத்தில் பொற்காலம் என பாஜக தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் ஆரம்பிக்க இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் டெல்லியில் இன்று நடந்த ‘சங்கல்ப் பத்ரா’ என்ற நிகழ்ச்சியில் பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் அமித்ஷா, மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் அமித்ஷா பேசுகையில்,
பாஜவின் தேர்தல் அறிக்கைக்கு பெயர் சங்கல்ப் பத்ரா. ‘கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் மிகவும் ஸ்திரமான ஓர் அரசாங்கத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். நமது நாடு இன்று உலகின் முக்கிய இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இன்று மின்சாரம் உள்ளது. விவசாயிகளுக்காக பணியாற்றியுள்ளோம். 2014 – 19 காலகட்டம் இந்தியாவின் சரித்திரத்தில் பொற்காலம். 8 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 7 கோடி குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, 50 கோடி மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது பா.ஜ., ஆட்சியில், இந்தியா பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது. தேச பாதுகாப்பு முக்கியமானது. அதனை உறுதி செய்துள்ளோம். 50 கோடி ஏழை மக்களுக்காக உழைத்துள்ளோம்.
தேர்தல் அறிக்கை குறித்து ராஜ்நாத் சிங் கூறும்போது,
‘சங்கல்ப் பதரா’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அது தொலைநோக்கு பார்வை கொண்டது மற்றும் நடைமுறைக்கு சாத்தியமானது. புதிய பாரதத்தை நோக்கி பாஜகவின் தேர்தல் அறிக்கை உள்ளது. 130 கோடி மக்களுக்கும் இந்த தேர்தல் அறிக்கை திருப்தி அளிக்கும். மோடி தலைமையிலான அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. மக்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்குவதில் மோடி அரசு சிறப்பாக செயல்படுகிறது. பாஜக தேர்தல் அறிக்கையில் 75 சிறப்பம்சங்கள் இருக்கின்றன என்றார்.