June 14, 2018
தண்டோரா குழு
தமிழகமே எதிர்பார்த்து இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதில்,தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம் செல்லும் என்றும்,நீதிபதி எம்.சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.மேலும்,வழக்கும் 3 வது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில்,இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முக ஸ்டாலின் – திமுக செயல் தலைவர்:
ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில்,தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும்.தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும்.அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்.
தமிழிசை செளந்திரராஜன்- தமிழக பா.ஜ.,தலைவர்
தீர்ப்பு ஒரு தீர்வில்லாமல் வந்துள்ளது.யாருக்கும் சாதகமாகவும் பாதகமாகவும் இல்லாமல் தீர்ப்பு வந்துள்ளது.யாருக்கும் முன்னடைவு பின்னடைவு கிடையாது.தீர்வு வரும் என எதிர்பார்த்துள்ளார்கள்.ஆனால், தீர்வு கிடைக்கவில்லை.18 எம்எல்ஏக்கள் நிலை தான் திரிசங்கு நிலையில் உள்ளனர்.நிச்சயமன்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
டி.கே.எஸ். இளங்கோவன்– திமுக
தீர்ப்பின் தன்மை என்ன என்பதை பார்க்க வேண்டும்.நீதிமன்ற தீர்ப்பு,மற்ற வழக்குகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.இதில் அரசியல் கட்சிகள் குறுகிய கால பலன்கள் அடைவதை பற்றி கருத்து சொல்ல முடியாது.
டிடிவி தினகரன் – அமமுக துணைப் பொதுசெயலாளர்:
உயர்நீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு எந்தவித பின்னடைவும் இல்லை.தீர்ப்பு யாரும் எதிர்பார்த்தது போல் இல்லை.எங்களுக்கு 50 சதவீத வெற்றி கிடைத்துள்ளது.தீர்ப்பால் மக்களுக்கு எதிரான அரசு நீடிக்கிறது என்ற ஒற்றை வரியே பதிலாக இருக்கிறது.புதுச்சேரி சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும், தமிழக சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும் எப்படி இருக்க முடியும்.21 பேரும் ஒன்றாக தான் உள்ளோம். அவர்கள், பணத்துக்காக சொத்துக்காக எங்களிடம் இல்லை.கட்சியை காப்பாற்ற ஒன்றாக உள்ளோம்.நானே போக சொன்னால் கூட அவர்கள் போக மாட்டார்கள்.தீர்ப்பால்,அரசின் ஆயுள் 2,3 மாதம் நீடிக்கிறது. தீர்ப்பில் மக்களுக்கு சந்தேகம் எழுகிறது.நீதிமன்ற தீர்ப்பின் மூலம் மக்கள் தோல்வியடைந்துள்ளனர்.
திருமாவளவன் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்:
பொதுமக்கள் சற்றும் எதிர்பாராத ஒரு தீர்ப்பாக அமைந்துள்ளது.3வது நீதிபதியின் பார்வைக்கு எடுத்து செல்லப்படுகிறது.உடனடியாக,குறுகிய கால அவகாசத்தில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்
முத்தரசன் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:
8 மாதம் நடந்த இந்த வழக்கில் தீர்ப்பு இப்படி வந்துள்ளது.18 தொகுதி மக்கள் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும்.இதனால்,இந்த வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க உயர்நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.