March 11, 2026
தண்டோரா குழு
கோவையில் செயல்பட்டு வரும் பிரபலமான கல்வி நிறுவனங்களில் ஒன்றான
பார்க் கல்வி குழுமத்தின் சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் மற்றும் “ICONIC MOM 2026” விருது வழங்கும் விழா கல்விக் குழுமத்தின் பிரேமா ரவி அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி மற்றும் முதன்மை செயல் அதிகாரி Dr. அனுஷா ரவி தலைமையில் இந்த விழா நடைபெற்றது. அனைத்து மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு தலைமை தாங்கிய Dr. அனுஷா ரவி தனது சிறப்புரையில்,
வருடம் தோறும் நாங்கள் இந்த மகளிர் தினத்தை “துர்கா” என்ற பெயரில் சிறப்பாக நடத்தி பல சாதனைப் பெண்களை கௌரவ படுத்தியுள்ளோம். ஆனால் இந்த வருடம் ஏன் நாம் நம்முடைய மாணவ மாணவியரின் தாயார்களை கௌரவிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் உதித்தது தான் “ICONIC MOM 2026” விருது.
மாணவ மாணவியர் தங்களது தாயாரை பற்றி 30 அல்லது 40 வினாடிக்குள் பேசிய காணொளியை இந்த விருதுக்காக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. பெறப்பட்ட காணொளி மொத்தம் 752. இதில் முதல் சுற்றில் தேர்வானவை 35 காணொளிகள். 35 காணொளிகளையும் கல்லூரியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு Polling முறையில் 10 சிறந்த காணொளி தேர்வு செய்யப்பட்டது.
இந்தப் 10 தாயுமார்களையும் இந்த விழாவிற்கு அழைத்து வந்து அவர்களுடைய குழந்தைகளுடன் கௌரவப்படுத்தப்பட்டார்கள்.கேடயம், கிரீடம்,பட்டயம்,பரிசு என்று கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்த காணொளிகள் மற்றும் தாய்மார்களின் வரவு அரங்கத்தில் இருந்த அனைவரின் கண்களையும் நனைத்தது.இந்த உணர்ச்சி மிகுந்த தருணத்தில் Dr.அனுஷா ரவி இந்த 10 குழந்தைகளின் ஒரு வருடத்திற்கான கல்வி கட்டணத்தை ரத்து செய்வதாக மேடையில் அறிவித்து தாய்மார்களையும் அவர்களுடைய குழந்தைகளையும் ஆனந்த கண்ணீரில் மிதக்க வைத்தார்.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்த மேடைப் பேச்சாளர் திருமதி T சாந்தாமணி,நான் மேடைகளில் பல கருத்துக்களை நகைச்சுவையுடன் தெரிவித்து வந்துள்ளேன். ஆனால் இந்த நிகழ்வு என்னையும் கண்கலங்க வைத்துள்ளது. ஆகவே எப்படி பேசுவேன் என்று தெரியவில்லை என்று தனது உரையை துவங்கினார்.
மகளிர் தினம் கொண்டாடப்படும் வரலாற்றை தெளிவாக எடுத்துரைத்தவர் பல போராட்டங்களுக்கு மத்தியில் வென்ற பெண்களின் சாதனைகளை எடுத்துரைத்தார்.
தனது உரையில், பெற்றோரை இன்றே கௌரவித்து விடுங்கள், நீங்கள் கௌரவிக்கலாம் என்று நினைக்கும் போது அவர்கள் உங்களுடன் இருக்க மாட்டார்கள் என்று அறிவுரையை மாணவியர்களுக்கு கூறி தனது உரையை நிறைவு செய்தார்.