March 13, 2018
தண்டோரா குழு
கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்று வரும் சிறைவாசிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்து,காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா பேசினார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பேட்டியளித்த அவர்,
10 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார். மேலும் சிறைச்சாலை என்பது தண்டனைக்கூடம் அல்ல அது சீர்திருத்தக்கூடம் என்றார். தமிழக அரசு அரசியலமைப்புச்சட்டம் 161 வது பிரிவை பயன்படுத்தி 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தார். இது நாள் வரை விடுதலை செய்யப்படவில்லை. சிறைவாசிகளை மன்னித்து முன்கூட்டியே தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். ரிஸ்வான் பாட்சா தனக்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்.
விடுதலை கிடைக்காத ஏக்கத்தில் மரணமடைந்த சோக சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்தார்.இறந்த ரிஸ்வானின் மனைவிக்கு அரசு வேலை மற்றும், 25 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
சிறைவாசிகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவர் உட்பட வசதிகள் செய்து தர வேண்டும்.கோவை மத்திய சிறையில் 300 ஆயுள் கைதிகள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலேயே தண்டனையை கழித்திருந்தால் விடுதலை செய்யப்பட வேண்டும்.
தமிழகம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறைவாசிகள் ஆயுள் தண்டனை பெற்று விடுதலைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.