May 23, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆரம்பக்கட்டத்தில் பா.ஜ.க போராட்டம் நடத்திய போது மக்கள் ஆதரித்திருந்தால் இன்று 10 பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தூத்துக்குடிக்கு இப்பொது செல்லும் திட்டமில்லை எனவும்,பொள்ளாச்சியில் நடைபெறும் மாநில செயற்குழுவில் கலந்து கொண்ட பின்னர் டெல்லி செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.பா.ஜ.க சார்பில் தூத்துகுடி செல்வது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்றார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதலில் போராடியது பா.ஜ.க. தான் என்றும்,தற்போது பல பேர் வேஷங்கள் போடுவதாகவும்,இந்த ஆலை வரக்கூடாது என சாகும்வரை உண்ணாவிரதம் நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.
மேலும்,ஆலைக்கு அன்று அனுமதி கொடுத்தல் உள்ளிட்டவை திமுக உட்பட மற்ற கட்சிகள் செய்த தவறு என்று குற்றச்சாட்டியவர்,தூத்துக்குடி சம்பவம் வருத்தம் அளிப்பதாகவும்,பின்னணி குறித்து முழுமையாக தெரியாமல் பேச முடியாது என்றும்,இருப்பினும் முழுமையாக ஆய்வுகள் செய்ய வேண்டும் என்றும்,காவல் துறை சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இருக்க கூடியது எனவும் குறிப்பிட்டார்.