September 1, 2018
தண்டோரா குழு
ஸ்டாலின் ஒரு கட்சிக்கு தான் தலைவராகியிருக்கிறார் முதல்வராக வில்லை என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்பி.வேலுமணி,
பாரம்பரிய மிக்க ஒரு கட்சியான திமுகவில் வாரிசு அடிப்படையில் தலைவராக தேர்வு செய்யப்பட்டு மு.க.ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறிவருகிறார். உலகின் பணக்கார குடும்பங்களில் 10 வது குடும்பம் என கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முதலில் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். அதிமுக அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார். முந்தைய திமுக ஆட்சியில் குடிநீர் திட்டங்களுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் அதிமுக அரசு 5 ஆண்டுகளில் 21 ஆயிரத்து 988 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 900 கோடி மில்லியன் லிட்டராக இருந்த குடிநீர் வினியோகத்தில் 2400 மில்லியன் லிட்டர் கூடுதலாக வழங்கப்பட்டு வருவருகிறது. 8 கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு டெண்டர் வழங்காமல் பாதியிலேயே திமுக அரசு விட்டுச்சென்றதது. அந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது அதிமுக ஆட்சியில் முழு வேகத்தில் நடந்து வருகிறது. இதே போல் சாலை, பாலங்கள், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட 7 துறைகளில் அதிமுக அரசு முனைப்புடன் திட்டங்களை செயல் படுத்தியுள்ளது.
அனைத்து டெண்டர்களும் இணைய வழி டெண்டர்களாகவே வழங்கப்பட்டு வருகிறது. எல்.ஈ.டி விளக்குகள் தொடர்பான குற்றச்சாட்டில் உண்மை இல்லை. 7 ஆண்டு பராமரிப்பு என்ற திட்டத்தின் அடிப்படையில் டெண்டர்கள் விடப்பட்டுள்ளதால் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் வரை அரசுக்கு மின் கட்டணம் மிச்சமாகியுள்ளது என விளக்கமளித்தார்.மேலும், ஒரு கட்சிக்கு தலைவராக இருந்து கொண்டு ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிப்பதாகவும் ஸ்டாலின் துணை முதலமைச்சராக ஆட்சியில் இருக்கும் போது ஈழப்படுகொலைகளை தடுத்திருக்கலாம் எனவும் அப்போது மவுனமாக இருந்து விட்டு தற்போது பேசுவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். அதைபோல் ஸ்டாலின் ஒரு கட்சிக்கு தான் தலைவராகி இருப்பதாகவும் அவர் முதலமைச்சர் ஆகவில்லை என்றும் அவர் முதல்வராகிவிட்டதாக நினைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருவதாகவும் எஸ்.பி வேலுமணி விமர்சித்தார்.