December 17, 2020
தண்டோரா குழு
கோவிட் 19 தொற்றுநோய் பரவல் ஏற்பட்டு இருந்தாலும்,இந்திய பொருளாதாரம் 2021 ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதத்துடன் மீண்டும் முன்னேறும் என நம்புகின்றோம் என இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் 41 வது பட்டமளிப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வேளாண்மை துறை அமைச்சர் அன்பழகன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பட்டமளிப்பு விழாவில் 1,385 மாணவர்களுக்கும் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மேற்படிப்புக்களுக்கான பட்டங்களை துணை குடியரசு தலைவர் வெங்கையாநாயுடு வழங்கினார்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் துவக்க உரையினை தமிழில் சிறிது நேரம் பேசினார்.
பின்னர் ஆங்கிலத்தில் உரையாற்றிய அவர்,
நம்நாட்டின் அவசியத் தேவை விவசாயம் எனவும்,எந்த வானிலையையும் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு லாபகரமாகவும், அதிக விளைச்சளைக்கொடுக்கக்கூடிய பயிர் ரகங்கள் அவசியம்.வேளாண்மை பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, நமது கலாச்சாரம் சார்ந்த்தும் கூட என தெரிவித்த அவர்,மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வேளாண்மையை நம்பியுள்ளனர்.வேளாண்மை கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு எனவும் விவசாயத்தை லாபகரமான , உற்பத்தித்திறன் மிக்கதாக மாற்றுவது அவசியம் எனவும் தெரிவித்தார்.
மேலும்,கோவிட் 19 தொற்றுநோய் பரவல் ஏற்பட்டு இருந்தாலும்,இந்திய பொருளாதாரம் 2021 ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதத்துடன் மீண்டும் முன்னேறும் என நம்புகின்றோம்.
தொற்று காலத்தில் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயம் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு பொருளாதார வளர்ச்சியை உருவாக்கியது.கடந்த ஆண்டை விட 59 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு விவசாயம் அதிகரித்துள்ளது.கொரொனா நெருக்கடி காலத்திலும் உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது.நீர் ஆதாரங்கள் மாசுபடுவது கவலைக்குரியது. தமிழகம் போன்ற நீர் பற்றாக்குறை உள்ள மாநிலத்தில், வறட்சியைத் தாங்கும் மரபணு வகைகளையும் நீர் சேமிப்பு தொழில்நுட்பங்களையும் உருவாக்க இனப்பெருக்கம் செய்ய வேண்டும். விவசாயத்தில் உற்பத்தியை அதிகரித்து, அதனுடைய செலவினை குறைக்க வேண்டும் இது சாத்தியமான ஒன்றுதான். விவசாயத்தில் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்.அதற்கு வேளாண்மை பல்கலைக்கழகங்கள் உறுதுனையாக இருக்கும்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளன. அதன் வாயிலாக 72 % விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். விவசாயிகளின் பிரச்சனையில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். எல்லா துறைகளும் விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகள் அவர்களுக்காக மட்டும் உழைக்கவில்லை , நாட்டு மக்களுக்காக உழைக்ககின்றனர் , இதை மதிக்கும் வகையில் அவர்கள் மீது எல்லா துறையினரும் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவில் நூற்றுக்கணக்கான உணவுகள் இருக்கின்றது. தமிழ்நாட்டில் விதவிதமான உணவு வகைகள் இருக்கின்றது.வத்த குழம்பு, மோர் குழம்பு போன்ற உணவு வகைகள் நமக்கானது எனவும்,பர்க்கர், பீட்சா போன்றவை நம்முடைய கால நிலைக்கு ஏற்ற உணவு வகையாக இருக்காது.கூகுள் நமக்கு முக்கியம்தான், ஆனால் ஆசிரியர்களுக்கு மாற்றாக கூகுள் இருக்க முடியாது என கூறிய அவர் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அனைவரும் பசுமையான உலகை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.