January 5, 2019 தண்டோரா குழு
வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றால் தேர்தலை கண்டு அச்சப்படுகிறோம் என்று அர்த்தமா? என முதல்வர் பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவாரூர் தொகுதியில் ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக சார்பில் பூண்டி கலைவாணனும் அமமுக சார்பில் காமராஜும், நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் ஹமீதும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், திருவாரூர் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்காக சென்னை ராயப்பேட்டையில் நேர்காணல் நடைபெற்றது.
பின்னர் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணைமுதல்வர் ஓபிஎஸ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ்,
திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு 52 பேர் விருப்ப மனுவை தெரிவித்திருந்தனர். 45 பேர் நேர்காணலில் கலந்துகொண்டனர். இன்னும் ஓரிரு தினங்களில் கழகத்தின் சார்பாக திருவாரூர் சட்டமன்ற வெற்றி வேட்பாளரை அறிவிப்போம். வேட்மனு தாக்கலுக்கு இன்னும் அவகாசம் உள்ளது.
முதல்வர் பழனிச்சாமி பேசுகையில்,
வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றால் தேர்தலை கண்டு அச்சப்படுகிறோம் என்று அர்த்தமா? எத்தனை தேர்தல் வந்தாலும் அவற்றை சந்திக்க அதிமுக அச்சப்படாது. திருவாரூர் தேர்தலில் அஇஅதிமுகவின் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய சரித்திரத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.