November 21, 2019
தண்டோரா குழு
கோவை வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 32 அதிநவீன கேமரா மற்றும் போத்தனூர் புற நகர் காவல் கட்டுப்பாட்டு அறையை கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் திறந்து வைத்தார்.
கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மொத்தம் 80 பிளாக்குகளும், 2846 குடியிருப்புகளும் உள்ளது. கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து மாற்றப்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். குடியிருப்பு அருகே சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், அதனை கட்டுப்படுத்த போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்குடியிருப்பு மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் படி வெள்ளலூர் குடியிருப்பில் பேருந்து நிலையம் முதல்
அனைத்து தெருவிலும் சுமார் 32 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும் போத்தனூர் புற காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இந்த சி.சி.டி.வி கேமரா மற்றும் புற காவல் கட்டுப்பாட்டு அறையை மாநகர காவல் ஆணையர் சுமித்சரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன், துணை ஆணையர் (குற்றம்) உமா, துணை ஆணையர் காவலர் பயிற்சி தலைமையகம் செல்வகுமார், உதவி ஆணையர் செட்ரிக் இமானுவேல், போத்தனூர் ஆய்வாளர் மகேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புற காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் சி.சி.டி.வி பொருத்த உதவியாக இருந்த குடியிருப்பை சேர்ந்த அம்பி என்ற ரங்கசாமி என்ற இளைஞருக்கு பொன்னாடை போத்தி கவுரவிக்கப்பட்டது.
மேலும் புற காவல் கட்டுப்பாட்டு அறை அருகே பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் குழாயும் பொருத்தப்பட்டது.