April 27, 2019 தண்டோரா குழு
தமிழகத்தில் பாம்பன் பாலம் உள்ளிட்ட 19 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது தொடர்ந்து பாம்பன் ரயில் பாலத்தில் செக்யூரிட்டி கமாண்டோ ஜெகநாதன் தலைமையில் மோப்ப நாய் ஆஸ்டின் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடைபெற்றது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள் நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் ஏப்.19ல் வெடிகுண்டு வெடித்ததில் 359 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிசிச்சை பெற்று வருகின்றனர்.இத்துயரச் சம்பவத்தால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.இந்நிலையில் சென்னையில் உள்ள காவல்துறை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று தமிழகத்தில் பாம்பன் பாலம் உள்ளிட்ட 19 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் ஏராளமான போலீசார் பாம்பன் ரயில் மற்றும் சாலை பாலங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் சாலை பாலத்தை கடக்கும் வாகனங்கள் இரு சக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் அரசு பேருந்துகளை தீவிர சோதனைக்கு பிறகே பயணத்தை தொடர அனுமதித்தனர்.சோதனை முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை இருந்தபோதிலும் பாம்பன் பாலத்தில் ரயில் பாலத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்வே செக்யூரிட்டி கமாண்டோ ஜெகநாதன் தலைமையில் மோப்ப நாய் ஆஸ்டின் உதவியுடன் பாம்பன் ரயில் பாலத்தில் சோதனை மேற்கொண்டனர்.