December 7, 2019 தண்டோரா குழு
புதுச்சேரி பெரிய மார்க்கெட் பகுதியில் வெங்காயம் திருடியவரை வியாபாரிகள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெங்காயம் விலை உயர்வால் நாடு முழுவதும் வெங்காயத்தை திருடுவது, அதனை திருமண பரிசாக தருவது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் புதுச்சேரியில் வெங்காயத்தை திருட முயன்றவர் பொதுமக்களிடம் சிக்கியுள்ளார். புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் மற்றும் சில்லரை வியாபாரம் நடைபெற்று வருகிறது. இங்கு, வேல்முருகன் என்பவர் கடந்த 25ஆண்டுகளாக மொத்த காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இன்று(டிச.,7) அதிகாலை பெங்களூரில் இருந்து லாரி மூலம் வேல்முருகன் கடைக்கு வந்த வெங்காய லோடை சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறக்கி வைத்து விட்டு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில், ஒரு மூடை வெங்காயம் மாயமானது. அப்போது, முத்தரையர் பாளையம் பகுதியைச் சேர்ந்த காந்திலால் என்பவர், தனது இருசக்கர வானகத்தில் மூலம் வெங்காய மூட்டைகளைத் திருடிக் கொண்டு செல்வது தெரியவந்தது
அதனைக் கண்ட அப்பகுதி வியாபாரிகள், அவரை பிடித்து கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இந்த பகுதியில், அடிக்கடி, வெங்காயம், பூண்டு மூட்டைகள் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, பெரியகடை காவல் நிலையத்தில் காந்திலாலை வியாபாரிகள் ஒப்படைத்தனர். முதலில் ஒரு வெங்காய மூட்டையை திருடி சென்று வீட்டில் வைத்த பின்னர் இரண்டாவது மூட்டையை திருடும் போது மாட்டிக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரது வீட்டில் திருடி வைத்திருந்த ஒரு மூட்டை வெங்காயத்தை பறிமுதல் செய்தனர்.