July 25, 2018
தண்டோரா குழு
கருத்து வேறுபாடு,ஒற்றுமையின்மை என நாட்டில் கணவன்-மனைவியிடையே நடக்கும் சண்டைகள் ஏராளம்.அதிலும்,அரிதாக சிலர் இவ்வுலகில் வாழ்ந்து தான் வருகிறார்கள்.அப்படி ஒருவர் தான் ஆசைதம்பி.
இவர் புற்றுநோயால் இறந்த தன் மனைவியின் ஞாபகார்த்தமாக அவரது முழு உருவச்சிலையை வீட்டில் வைத்து தினமும் வணங்கி வருகிறார்.மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூரில் உள்ள தென்பாதி கிராமத்தில் வசிப்பவர் ஆசைத்தம்பி(62).இவரது மனைவி பெரியபிராட்டி(55).இவர்களுக்கு 1977-ம் ஆண்டு திருமணம் நடந்தது.இரண்டு மகள்கள் உள்ளனர்.
திருமணமாகி சில நாட்களில் சரியான வேலை எதுவும் ஆசைத்தம்பிக்கு இல்லை என்பதால்,வேலை தேடி சென்னை சென்றனர்.அங்கு ஒரு மளிகை நடத்தினர்.மனைவி பெரியபிராட்டியின் வழிகாட்டுதல் ஆலோசனை உதவி காரணமாக உழைப்பால் உயர்ந்து சொந்தமாக மளிகைக்கடை வைக்கும் அளவுக்கு வளம் பெற்றார்.
ஆசைத்தம்பிக்கு தோல்விகள்,வருத்தங்கள்,ஏமாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் அவரது மனைவி அவருக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.மளிகைக் கடையை மூடிவிட்டு வந்தால் மனைவியுடன் அளவளாவுவதிலேயே அதிக நேரத்தை செலவழிப்பார்.இப்படி சந்தோஷமாக சென்றுக்கொண்டிருந்த ஆசைத்தம்பியின் வாழ்க்கையில் ஓர் பேரிடி ஏற்பட்டது.
கடந்த ஆண்டு திடீரென புற்றுநோயால் தாக்கப்பட்ட பெரியபிராட்டி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.மனைவியை 40 ஆண்டு காலம் பிரியாமல் வாழ்ந்த ஆசைத்தம்பி நொறுங்கிப்போனார். இதனால் தனிமையில்,வெறுமையில் மனைவியை நினைத்து தவித்தார்.மனைவி மரணமடைந்து 16ம் நாள் காரியம் நடத்த முடிவானது.அப்போது தனது மனைவிக்கு ஒரு சிலை செய்ய வேண்டும் என்று விரும்பினார் ஆசைத்தம்பி.
இதுகுறித்து மற்றவர்களிடம் சிலரிடம் கேட்டுள்ளார். அதற்கு “என்னப்பா தலைவர்களுக்குத்தான் சிலை வைப்பார்கள் நீ மனைவிக்கு போய் சிலை வைக்கிறேன்னு சொல்றியே” என்று சிரித்தனர். எனினும் ஆசை தம்பி தன் முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.
அதற்காக ஒரு சிற்பியை வரவழைத்து அதற்கான வேலையையும் தொடங்கினார்.அவரது மனைவியின் உயரம் 5 அடி 1 அங்குலம்.அதே உயரத்தில் அவரது உடல்வாகு அளவிலேயே சிலை செய்ய சொன்னார்.பெரியபிராட்டி அம்மாளின் சிலை தயாரானது.மனைவியின் சிலை கண்டு பூரித்து போனார் ஆசைத்தம்பி.அந்த சிலையை தான் மட்டும் காணாமல்,அதற்கு திறப்பு விழா ஒன்றிற்கு ஏற்பாடு ஊரையே வரவழைத்தார்.
அச்சு அசல் அவரது மனைவியின் உருவத்தில் இருக்கும் சிலைக்கு பட்டுப்புடவைக்கட்டி,தாலி, செயின்களை அணிவித்து வீட்டின் நடுவில் வைத்து வணங்கி வருகிறார் ஆசைத்தம்பி.தினந்தோறும் மனைவியின் சிலையிடம் ஒரு மணிநேரமாவது பேசிக் கொண்டிருக்கிறாராம்.இது பைத்தியக்காரத்தனமாகவும்,தேவையில்லாததாக தோன்றும்.சிலருக்கு இது உணர்வுபூர்வமாக தெரியும். எப்படிப்பார்த்தாலும் அதில் தென்படுவது பாசம் மட்டும் தான்.
தனது தந்தையின் எண்ணத்துக்கு உதவியாக இரண்டு மகள்களும் தாயின் சிலையை வணங்கி வருகின்றனர்.மனைவி இறந்த பின்னர் அவர் தன்னுடன் வாழ்வதாக எண்ணும் கணவர்,இந்த காலத்தில் ஆச்சர்யமான ஒரு நிகழ்வு தான்.