April 27, 2019 தண்டோரா குழு
சூலூர் சட்டமன்ற தொகுதியில் முக்கிய தொழிலாக இருக்கும் விசைத்தறி தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை குறைத்து, விசைத்தறி தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்தார்.
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமி சின்னியம்பாளையம் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். சின்னியம்பாளையம் பி.என்.பி. காலனியில் தொடங்கிய பிரச்சாரம், அரிஜன காலனி, ஜெமினி சந்து, வெங்கிட்டாபுரம், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
வாகனம் மூலம் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், வீடு வீடாக சென்றும் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். அப்போது, பெண்கள் ஆரத்தி எடுத்து பொங்கலூர் பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சின்னியம்பாளையம் பேருந்து நிறுத்தம் முன்பாக பிரச்சாரம் மேற்கொண்ட போது பொங்கலூர் பழனிச்சாமி பேசுகையில்,
மே மாதம் 19ந் தேதி நடைபெறுகின்ற தேர்தல் எடப்பாடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல். தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கின்றதோ, அப்போதெல்லாம் பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளது. இந்த திருச்சி சாலையை விரிவாக்கம் செய்த பெருமை தி.மு.க.வையே சேரும். மேலும், செம்மொழி மாநாடு மூலம் கோவைக்கு 1,000 கோடி ரூபாயில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடி அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை பிடித்தார். ஆனால், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
இந்த தொகுதியில் உள்ள முக்கிய தொழிலாக விசைத்தறி உள்ளது. ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக நீக்கி விசைத்தறி தொழில் காப்பாற்றப்படும். தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் சிறப்பான தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது. நீட் தேர்வு ரத்து, விவசாயக் கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, கேபிள் டிவி கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சூலூர் தொகுதியில் நிச்சயமாக தி.மு.க. வெற்றி பெறும், என பொங்கலூர் பழனிச்சாமி பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.