March 1, 2019 தண்டோரா குழு
இந்திய விமானி அபிநந்தனுக்கு வாகா எல்லையில் பொதுமக்கள் தேசிய கொடியசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் விமானம் எப்16 இந்தியாவின் வான் எல்லையில் பறந்தது. அதனை பின்தொடர்ந்த இந்திய மிக் 21 ரக விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் விமானத்தை விழ்த்தியது.
பின்னர் திரும்பும் வழியில் இந்திய விமானத்தை பாகிஸ்தான் தாக்கியது. அப்போது, இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யபட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை வைத்தனர். அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என இந்தியா சார்பில் தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து, நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று அறிவித்தார்.
இந்தநிலையில், பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை லாகூரில் உள்ள இந்திய தூதரிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது. பின்னர் வாகா எல்லை வழியாக அபிநந்தன் தாயகம் திரும்பினார். இந்தியா-பாகிஸ்தான் வாகா எல்லையில் ஏராளமானோர் பொதுமக்கள் குவிந்து அபிநந்தனுக்கு தேசிய கொடியசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.