June 18, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் வடக்கு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாஸ் கிளினிங் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 38வது வார்டு பீளமேடு பயணியர் மீல் சாலையில் உள்ள சுகாதார அலுவலக வளாகத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தூய்மை பணியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
தூய்மை பணியாளர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வருகை தர வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மிக சிறப்பாக செய்திட வேண்டும். வீடுகள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்கா குப்பை என சேகரிக்கப்பட வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து சரவணம்பட்டி சுகாதார பிரிவு அலுவலக வளாகத்தில் 28வது வார்டு முதல் 31வது வார்டு வரை உள்ள பகுதிகளில் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை, உடல் வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் உடல் ஆக்சிஜன் அளவை கண்டறிந்த பணிகளின் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, உடையார்பாளையம் சாலை பகுதி, அப்பநாயக்கன்பாளையம் கலைஞர் நகர் பகுதிகளில் மாஸ் கிளினிங் பணிகள் நடைபெற்றதை மாநகராட்சி கமிஷனர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகரப்பொறியாளர் லட்சுமணன், வடக்கு மண்டல கொரோனா கண்காணிப்பு அலுவலர் மேனகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.