December 31, 2018 தண்டோரா குழு
வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கட்சி தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இத்தேர்தலில் அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து, மொத்தமுள்ள முந்நூறு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைமையிலான கூட்டணி 281 தொகுதிகளைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதன்மையான எதிர்க்கட்சியான வங்கதேசத் தேசியக் கட்சி 6இடங்களில் வெற்றிபெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ஹெலால் உத்தீன் அகமது தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இதற்கிடையில், வங்கதேச தேசியவாத கட்சி போட்டியிட்ட 221 தொகுதிகளில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேர்தலை செல்லாது என அறிவித்துவிட்டு நடுநிலையான அரசின் கீழ் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என அந்தக் கட்சி கோரியுள்ளது.
இதனையடுத்து நான்காவது முறையாக, பிரதமர் பதவியை ஹசீனா கைப்பற்றுகிறார்.