April 26, 2019 தண்டோரா குழு
இந்திய வானிலை மையமானது ரெட் அலர்ட் ஏதும் விடவில்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது கிழக்கு இந்திய பெருங்கடல் – தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது.தொடர்ந்து வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறும். அந்த புயலுக்கு ஃபனி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை மைய இக்குனர் பாலச்சந்திரன்,
தற்போது நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து புயலாகவும் மாறக்கூடும். காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 1500 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது, வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் ஏப்ரல் 30ம் தேதியன்று வடதமிழக கடற்கரைக்கு அருகில் வரக்கூடும்.
மீனவர்கள் இன்றும் நாளையும்(26, 27) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம். மேலும், ஏப்ரல் 30ம் தேதியன்று வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. எனினும் புயல் நகர்வதை பொறுத்தும் கனமழைக்கான வாய்ப்பில் மாற்றங்கள் நிகழக்கூடும்.
ரெட் அலர்ட் என்பது இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தரப்படுவதில்லை. ரெட் அலர்ட் என்பது வானிலை ஆய்வு மையத்தால் கொடுக்கப்படுவதில்லை. கனமழைக்கான வாய்ப்புள்ள ஏதேனும் ஒரு பகுதி சிவப்பு நிறத்தில் காண்பிக்கப்படும் என்றும் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து, வரக்கூடிய நாட்களில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் புயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்பெற்றுள்ளன.
மாநில, தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழகத்தை ஏப்ரல் 30ம் தேதி ஃபானி புயல் தாக்கும் என்பதால் பேரிடர் மீட்புப்படையினர், ஊர்க்காவல் படையினர் மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்களுடன் தயாராக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.