February 22, 2021
தண்டோரா குழு
ரூ.165.43 கோடி மதிப்பீட்டில்குறிச்சி, குனியமுத்தூர் குடிநீர் அபிவிருத்தி திட்டம்
அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார்.
கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கான குடிநீர் அபிவிருத்தித்திட்டத்தின் மூலம் ரூ.165.43 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் திட்டத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மேலும் கோவை மாநகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அம்ரூத் திட்டத்தின் கீழ் தெற்கு மண்டலம் கோவைப்புதூர்,முல்லை நகரில் ரூ.71 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் திட்டத்தையும்,89வது வார்டுக்குட்பட்ட சுண்டக்காமுத்தூர் அன்பு நகர் பகுதியில் ரூ.75 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டியையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கான குடிநீர் அபிவிருத்தித் திட்டம் (பகுதி 2) ரூ.165.43 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இப்பகுதிகளுக்கு தற்போது நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 70 லிட்டர் என்ற விகிதத்தில் 6 முதல் 8 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சீரான குடிநீர் விநியோகிக்கும் பொருட்டு குனியமுத்தூர் பகுதிகளுக்கு ரூ.71.68 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன் மூலம் குனியமுத்தூரிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் என்ற விகிதத்தில் சமமாக பகிர்ந்து குடிநீர் விநியோகம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற, புதிய வீட்டுக் குழாய் இணைப்புகள் 20 ஆயிரம் குடியிருப்புகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், தெற்கு மண்டல உதவி கமிஷனர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.