December 10, 2018
தண்டோரா குழு
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் கருத்து வேறுபாடு நீடித்து வந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியிடம் உபரிநிதியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியை தனது நிதிப்பற்றாக்குறையை சரி செய்து கொள்வதற்காக கேட்டு, மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகியது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் இருந்து விமர்சனங்களும் எழுந்தது. ஆனால் மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் கடந்த நவம்பர் 19-ம் தேதி வாரியக் கூட்டம் நடைபெற்றது. அப்போது உர்ஜித் படேல் தன்னுடைய பதவியை ராஜினாமாவை அறிவிக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகியது. ஆனால் அவர் ராஜினாமா செய்யவில்லை. இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் உர்ஜித் பட்டேல் விளக்கம் அளித்துள்ளார். எனினும் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியதால், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுநராக கடந்த 2016 ஆம் ஆண்டு உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.