December 11, 2018
ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற்றபின் உர்ஜித் படேலை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மத்திய அரசு நியமித்திருந்தது. உர்ஜித் படேல் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி வரை இப்பொறுப்பில் இருப்பார் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
இதற்கிடையில், உர்ஜித் படேல் திடீரென தனது சொந்தக்காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து அடுத்த ஆளுநர் யார் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், ஒடிசாவைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு 63 வயதாகும்.ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சக்திகாந்த தாஸ் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அப்பதவி வகிப்பார்.
இவர் பொருளாதார விவகார செயலாளராக 2015 முதல் 2017 வரை பணியாற்றியவர். தற்போது இந்தியாவின் நிதி ஆணையக்குழுவின் உறுப்பினராகவும் ஜி20 மாநாடுகளின் இந்தியாவின் சார்பில் பங்கேற்பாளராகவும் உள்ளார்.
மேலும், இவர் தமிழகத்தில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.