April 2, 2019 தண்டோரா குழு
ரபேல் ஊழல் தொடர்பாக வெளியாக இருந்த ”நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து இருக்கிறது.
நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் என்ற தலைப்பிலான புத்தகத்தை, சென்னை தேனாம்பேட்டை பாரதி புத்தகாலயத்திலேயே வெளியிட திட்டமிடப்பட்டு, மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தி இந்து மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக இருந்தது .இந்நிலையில் “நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து இருக்கிறது.அங்கு வந்த ஆயிரம் விளக்குத் தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி கணேஷ், தேர்தல் விதிமீறல் எனக்கூறி, புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தடை விதித்ததோடு, சுமார் 150 புத்தகங்களை பறிமுதல் செய்தார்.
பின்னர் இந்த குறித்து பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ புத்தகத்தை வெளியிட தடை விதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை ஒப்படைக்க உத்தரவிட்டிருப்பதாகவும் சம்பவம் பற்றி சென்னை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாகவும் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு தேர்தல் ஆணையம் எந்த விதமான தடையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது