March 1, 2019 தண்டோரா குழு
ரத்ததானத்தின் மூலம் உயிர்க்கொல்லி நோய்கள் பரவாமல் தடுக்க டிஜிட்டல் தொழில்நுட்பம் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் இரண்டு செய்திகள் வைரலாகின. ஒன்று விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம். மற்றொன்று கோவையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு. இந்த சம்பவத்தில் ரத்த தானம் செய்த நபரின் ரத்தத்தை முறையாக ரத்ததான வங்கி பரிசோதனை செய்யாததால், தவறு நிகழ்ந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த விவகாரங்களைத் தொடர்ந்து, ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு உட்பட்ட ரத்ததான வங்கி, டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற உள்ளது.
இதில், ரத்த தானம் செய்யும் நபர்களின் பெயர், விவரங்கள் மற்றும் இதர விவரங்கள் சேகரிக்கப்படும். அப்படி சேகரிக்கப்பட்ட விவரங்கள் மூலம் பார் கோர்டு உருவாக்கப்படும். அந்த பார்கோர்டானது சேகரிக்கப்பட்ட ரத்த பாக்கெட்டில் ஒட்டப்படும். மேலும், ரத்தம் வழங்கிய நபர்களின் விவரங்கள் ரத்த தான வங்கியின் கணினியில் சேகரிக்கப்படும். பின்னர், சேகரிக்கப்பட்ட ரத்தம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு சமந்தப்பட்ட நபர்களின் விவரங்களோடு பொருத்திப்பார்க்கப்படும். இப்படி செய்வதன் மூலம் எச்ஐவி போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் பரவாமல் தடுக்க முடியும். குறிப்பாக, மூன்று மாதங்கள் சோதனை முறையில் டிஜிட்டல் தொழில்நுட்ப வழிமுறைகள் பின்பற்றப்படும், அதன் பிறகு முற்றிலுமாக டிஜிட்டலுக்கு மாற்றப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.