November 16, 2019
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த நாய்க்கன்பாளையம் பகுதியில் இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்த ஐந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சித்த போது யானைக் கூட்டங்கள் மின்சார டிரான்ஸ்பார்மர் மீது மோதி சென்றதால் ஏற்பட்ட தீப்பொறிகள் அப்போது பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ஆனைகட்டி மாங்கரை பாலமலை தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கு மேற்பட்ட யானைகள் உள்ளன. இவைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதங்களை விளைவித்து வருகின்றன.
இந்நிலையில் இன்று அதிகாலை கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த நாய்க்கன்பாளையம் பகுதியில் அதிகாலை 5 மணி அளவில் 5 யானைகள் கொண்ட காட்டு யானை கூட்டம் உணவு தேடி வந்துள்ளது. இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் மூன்று மணி நேரமாக அதே பகுதியில் சுற்றி சுற்றி வரும் காட்டு யானை கூட்டம் அருகில் இருக்கும் வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து பதுங்கிக் கொண்டது. இதனிடையே யானைகளை விரட்டும் போது அப்பகுதியில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது யானை கூட்டங்கள் மோதி சென்றதால் மின்சார கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டது இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். காட்டு யானைகள் கூட்டமாக குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இதே காட்டு யானை கூட்டம் கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன் பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 பகுதியில் நாய்களை துரத்திச் சென்றது சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.