May 31, 2019
தண்டோரா குழு
மத்திய அமைச்சரவையில் புதிய துறையை உருவாக்கி மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக நேற்று பதவி ஏற்றார். அத்துடன் மத்திய அமைச்சர்களும் பதவி ஏற்றனர். மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் 25 கேபினட் அமைச்சர்கள்,9 தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள், 24 மத்திய இணையமைச்சர்கள் என 58 பேர் பதவி ஏற்றனர்.பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தின் போது, குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்து, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் வழங்குவதை உறுதி செய்வதற்காக ‘ஜல சக்தி’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மேலும், இதற்காக தனி துறையும் உருவாக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில்,மோடி தலைமையிலான மத்திய அமைச்சவரையில் ஜல சக்தி துறை உருவாக்கப்பட்டது. ‘ஜல் சக்தி துறை’ என்பது குடிநீருக்கான அமைச்சகம் ஆகும். நாளுக்கு நாள் குடிநீர் பற்றாக்குறை அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. எனவே தண்ணீர் வளத்தை அதிகரிக்கவும், குடிநீர் பற்றாக்குறையை போக்கவும்,இந்த அமைச்சகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.அத்துடன் நீர் வளத்தை பாதுகாப்பது, நீர் வளத்தை பெருக்குவது, அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கவும் இந்த அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த துறையின் மந்திரியாக கஜேந்திர சிங் ஷெகாவத் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியில் இணை மந்திரியாக இருந்தவர். தற்போது கேபினட் மந்திரியாக உயர்ந்துள்ளார்.மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறையை மறுசீரமைத்து இந்த புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையும் இந்த துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய ‘ஜல் சக்தி துறை’ அமைச்சகத்தின் இணையமைச்சராக ரத்தன் லால் கட்டாரியா பொறுப்பேற்றுள்ளார்.