January 14, 2020
பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிப்ரவரி மாதம் இந்தியா வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க – சீன வர்த்தகப் போரை தொடர்ந்து இந்தியா மீதும் ட்ரம்ப் பல்வேறு வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவிற்கு வழங்கி வந்த ஜிஎஸ்பி வர்த்தக சலுகையை அமெரிக்கா ரத்து செய்தது. இதனை மீண்டும் வழங்க வேண்டும் என இந்தியா கோரி வருகிறது. இதற்கிடையில், கடந்த 7-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த உரையாடலின் போது, டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட டிரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
டொனால்ட் டிரம்பின் வருகைக்கு முன்னதாக வாஷிங்டனில் இருந்து பாதுகாப்பு மற்றும் தளவாடங்கள் குழுக்கள் இந்த வாரம் டெல்லிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றன. டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 24-ந்தேதி இந்தியா வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை தேதி பின்னர் மாறுபடலாம். டிரம்பின் இந்திய பயணத்தின் முக்கிய மைய புள்ளியாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இருக்கும். அமெரிக்காவின் முக்கிய கோரிக்கைகளாக இருந்த சிவில் விமான போக்குவரத்து, தரவு உள்ளூர் மயமாக்கல் மற்றும் ஈ-காமர்ஸ் தொடர்பான ஒப்பந்தங்களும் அடங்கும்.
அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அரசியல் ரீதியாகவும் ட்ரம்ப் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். ட்ரம்ப்பின் இந்திய பயணத்தின் போது ஜிஎஸ்பி சலுகையை அமெரிக்கா மீண்டும் வழங்கும் என இந்திய எதிர்பார்க்கப்படுகிறது.