May 1, 2020
தண்டோரா குழு
நாடு முழுவதும் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.அதன்படி,மே 17 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீடிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் முதன் முறையாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் 21 நாட்களுக்கு (ஏப்.14 வரை ) ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.
தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஏப்., 14ம் தேதி முதல் மே மாதம் 3ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. வரும் 3 ம் தேதியுடன் முடிவடயை உள்ள நிலையில் பிரதமர் மோடி உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில்,மே 4ம் தேதியில் இருந்து மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, மே 17 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீடிக்கப்படுகிறது.
எனினும் சிவப்பு மண்டலங்களில் தொற்று இல்லாத பகுதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஆரஞ்சு,பச்சை
மண்டலங்களில் அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி எந்தந்த மண்டலங்களில் என்னென்ன தளர்வுகள் உள்ளன என்பதை பார்ப்போம்.
சிவப்பு மண்டலங்களில் தளர்வுகள்
விமானம்,ரயில்,மெட்ரோ போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான சாலை போக்குவரத்து ஆகியவற்றுக்கான தடை நீடிக்கும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படத் தடை தொடரும். மக்கள் அதிகம் கூடும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் ஒட்டுமொத்தமாக அனுமதி கிடையாது. சமூக, அரசியல்,பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை திறக்கத் தடை தொடரும்.இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை யாரும் தேவையின்றி வெளியே வரக்கூடாது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வெளியே வரக்கூடாது.
அனைத்து மண்டலங்களிலும், வெளி நோயாளிகள் பிரிவு செயல்பட அனுமதிக்கப்படும். எனினும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் இதற்கு அனுமதி இல்லை. சிவப்பு மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கால் டாக்சி, ஆட்டோ ரிக்ஷா இயங்கத் தடை தொடரும். மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து அனுமதி இல்லை.
சிவப்பு மண்டலங்களில் சில கட்டுப்பாடுகளுடன் சில செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட விஷயங்களுக்கு தனி நபர்களும், வாகனங்களும் வெளியே செல்லலாம். நான்கு சக்கர வானங்களில் ஓட்டுநர் உள்பட இருவர் பயணிக்கலாம். இரு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். சிவப்பு மண்டலங்களில் நகர்ப்புறங்களில்தனித்தனியாக இருக்கக்கூடிய அனைத்துகடைகளையும் இயக்கலாம். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்கலாம். கிராமப்புறப் பகுதிகளில் தொழில் நடவடிக்கைகள், கட்டுமானப் பணிகள், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், உணவு பதப்படுத்துதல், செங்கல் சூளை பணிகள் இயங்கலாம். வணிக வளாகங்கள் தவிர அனைத்துக் கடைகளும் திறக்கலாம்.
ஆரஞ்சு மண்டலங்களில் தளர்வுகள்
சிவப்பு நிற மண்டலங்களில் தளர்வுகள் ஆரஞ்சு மண்டலங்களிலும் தொடரும். கால் டாக்சி இயங்கலாம். ஆனால், ஓட்டுநர் மற்றும் இருவர் மட்டுமே செல்ல வேண்டும். இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் மற்றொருவரும் பயணிக்கலாம்.மாவட்டங்களுக்கு இடையே தனி நபர்களோ,வாகனங்களோ அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு செல்லலாம்.
பச்சை மண்டலங்களில் தளர்வுகள்
பச்சை மண்டலங்களில் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டவற்றைத் தவிர மற்ற நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்.50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்கலாம். பேருந்து டெப்போக்களில் 50% பேருந்துகள் இயக்கப்படும்.அனைத்து மண்டலங்களிலும் அனைத்து சரக்கு போக்குவரத்துகளும் அனுமதிக்கப்படும்.