January 6, 2020
ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த மேட்டுபாளையம் காரமடை அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதேசி தினத்தைக் முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமாகும், கொங்கு மண்டலத்தின் மிகவும் பிரசித்திப் பெற்ற வைணவ ஸ்தலமான காரமடை அரங்கநாதர் கோவிலில் பெருமாள் சுயம்பு வடிவமாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடபடுவது வழக்கம், அதன்படி இவ்வாண்டு வைகுண்ட ஏகாதேசி திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி திருமொழி திருநாள் என்ற பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது.
இதனையடுத்து அரங்கநாத பெருமாளை போற்றி தினமும் 12 ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரதிவ்யபிரபந்த பாசுரங்களை நல்லான்சக்ரவர்த்தி சுவாமிகள், சுதர்சன பட்டர் சுவாமிகள் ஆகியோர் பெருமாள் முன்னிலையில் பாடிவந்தனர். இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசியான இன்று அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் அரங்கநாத சுவாமிக்கும், உற்சவர் அரங்கநாத பெருமாளுக்கும் திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் அரங்கநாத பெருமாள் சேஷ வாகனத்தில் கோவில் உள்பிரகாரம் வழியே வலம் வந்து ஸ்ரீ ஆண்டாள் தாயார் சன்னதி முன் வீற்றிருந்தார்.
பின்னர் வேதவிற்பனர்கள் மந்திரங்கள் முழங்க காலை 5.30 மணியளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் கதவு திறக்கப்பட்டுஅரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி புதேவியுடன்
அதன் வழியே வெளியே வந்து சொர்க்கவாசல் வெளியே வீற்றிருந்த நம்மாழ்வார், ராமனு ஜர், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கும் பெருமாள் காட்சி தந்தார். பின்னர் பெருமாள் கோவில் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த அலங்காரபந்தலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் பக்தி கோஷமிட்டு அரங்கநாதரை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.