April 10, 2021
தண்டோரா குழு
மூலப்பொருள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துதல் தொடர்பாக கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) பிரதமர் மோடிக்கு மனு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து காட்மா தலைவர் சிவக்குமார் கூறியிருப்பதாவது:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன. கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டு, மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி,தொழில் முனைவோர் தற்பொழுதுதான் நெருக்கடியிலிருந்து மீண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள, அசாதாரணமான மூலப்பொருள் விலை ஏற்றம் தொழில்
முனைவோர்களை மீண்டும் மிகுந்த நெருக்கடியில் தள்ளுவதாக இருக்கிறது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களான மைல்டு ஸ்டீல், ஸ்டெயின் லெஸ் ஸ்டீல், காப்பர், பித்தளை, அலுமினியம் பிளாஸ்டிக் போன்றவற்றின் விலை 20 முதல் 100 சதவிகிதம் வரை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களால் செயற்கையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூலப்பொருட்களின் விலை, நிலையாக இல்லாமல் நாளுக்கு நாள் அதிகரிக்கப்படுகிறது. ஒரு வேலையை செய்வதற்கு கொட்டேஷன் கொடுத்து, அதற்கான மூலப்பொருளை வாங்குவதற்குள்ளாகவே மூலப் பொருளின் விலை அதிகரித்து விடுவதால் தொழில் முனைவோர் கொரோனா தடுப்பு ஊரடங்கு இல்லாமலேயே தங்களது தொழிற்கூடத்தை மூடும்
நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர். எனவே மூலப்பொருள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி, நியாயமான விலையில், தட்டுப்பாடு இல்லாமல் மூலப்பொருள் கிடைக்க போர்கால அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விலை ஏற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தொழில் முனைவோர்கள் தொய்வின்றி தங்கள் தொழிலை தொடர்ந்து நடத்திட பிரதமர் மோடி உதவ வேண்டும்.
இவ்வாறு சிவக்குமார் கூறியுள்ளார்.