December 22, 2016
தண்டோரா குழு
கோவை மூதாட்டி கொலை வழக்கில் மணிப்பூரை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தப்பிச் செல்ல முயன்ற போது காலில் அடிபட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கோவை காந்திபுரம் ஒன்றாவது வீதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (83). இவர் கடந்த சில ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார். டிசம்பர் 19 ஆம் தேதி பழனியம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை காவல் துறையினர் கைப்பற்றி புலன் விசாரணை நடத்தி வந்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டிருந்தது.
இந்தக் கொலை வழக்கு விசாரணையை விரைவுபடுத்திய காவல் துறையினர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமீர் கான் என்ற இளைஞரைக் கைது செய்தனர்.
சமீர் கான் கேரளத்தில் உள்ள தனியார் உணவாக விடுதியில் சப்ளையராகப் பணியாற்றி வந்தார் என்றும், கோவையில் உள்ள நண்பரது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக வந்துள்ளார் என்றும் காவல் துறையினர் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீர்கானை சம்பவ இடத்திற்கு விசாரனைக்காக அழைத்துச் சென்றபோது அவர் தப்பியோட முயன்றார். அப்போது, காலில் பலத்த காயமடைந்தார். அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளார்.