April 26, 2020
தண்டோரா குழு
முழு ஊரடங்கு காலத்தின்போது தினமும் காலை இரண்டு மணி நேரத்துக்கு பால் விநியோகம் செய்ய அனுமதி வழங்குமாறு திருமலா, ஜெர்ஸி,ஹெரிடேஜ்,டோட்லா உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சென்னை, கோவை, மதுரை, ஈரோடு மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவிட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது.பால் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், விற்பனை செய்ய கடைகள் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட உள்ளதால் பல இடங்களில் பால் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
கால்சியம், வைட்டமின் டி, புரதச்சத்து உள்ளிட்ட சத்து நிறைந்த பால் குழந்தைகளுக்கு மிக தேவையானது.இதனால், ஊரடங்கு காலத்தில் பாதுகாப்புடனும், கட்டுப்பாடுடனும் பால் விற்பனை செய்ய இரண்டு மணி நேரம் அனுமதி அளிக்குமாறு மாநில அரசுக்கு தனியார் பால் நிறுவனங்கள்கோரிக்கை விடுத்துள்ளன.