June 9, 2018
தண்டோரா குழு
மும்பை நகரில் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது. இன்றும் கனமழை பெய்துவருகிறது. மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மோசமான வானிலை கரணமாக மும்பையில், 32 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் சேவையும் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் 12 ஆம் தேதி வரை மும்பை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் மும்பை மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இன்றும், நாளையும் மிக அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்குப் பருவ மழை இன்று மும்பை கடல்பகுதியை வந்தடைவதால் பொதுமக்கள் முடிந்த வரை வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சுற்றுலாப் பயணிகளும் வெளியூர்வாசிகளும் கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகவும், நிலைமை கட்டுக்கடங்காமல் போகும் நிலையில் உதவி படை அனுப்பி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது