March 27, 2019 தண்டோரா குழு
விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று 11:45-12:00 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளேன். அப்போது, முக்கிய தகவல்களை தெரிவிக்க உள்ளேன், அதனை அனைவரும் டிவி, ரெடியோ, ஊடகங்கள் மூலம் கவனிங்கள் என்று பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் நாடு முழுவதும் மோடி என்ன அறிவிப்பார் என எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு ஆற்றிய உரையில்,
இது நாடு பெருமைப்பட வேண்டிய நேரம். இந்தியா தற்போது விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது. நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விண்ணில் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றியடைந்துள்ளது. விண்வெளியில் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்தது. அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா விண்வெளியில் சாதனை படைத்துள்ளது. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. உலகின் விண்வெளித்துறையில் 4-வது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது.
இந்த சோதனைக்குப் பிறகும், விண்வெளி மூலம் போர் தொடுக்கப்படக் கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. இந்தியா, எப்போதும் அமைதியை விரும்பும் நாடாகத்தான் இருந்துள்ளது. அதே நேரத்தில் நம்மை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்போம். இது இந்தியாவின் செயற்கைகோள்களை பாதுகாக்க தானே தவிர, மற்ற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல. குறைந்த உயர சுற்றுப்பாதையில் செயற்கைக் கோளை நிறுத்தி இந்திய ராக்கெட் சாதனை படைத்துள்ளது. விண்வெளி போர் நடத்துவதற்கான திறனை இந்தியா பெற்றுவிட்டது. தரை வழியாக, நீர் வழியாக மற்றும் ஆகாய வழியாக மட்டுமல்ல, இனி நாம் விண்வெளி வழியாகவும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்தச் சாதனையைச் செய்வதற்கு உறுதுணையாய் இருந்த விஞ்ஞானிகளுக்கு நன்றி. இந்தியா, இந்த சோதனையின் மூலம் மேலும் வலுவடைந்துள்ளது. இன்றைய சோதனை வரும் தலைமுறைகளிலும் பிரதிபலிக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.