January 29, 2021
தண்டோரா குழு
கோவைக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கடந்த மாதம் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. இதில் 6,940 பேலட் இயந்திரங்கள், 5,670 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 6,330 வி.வி.பேட் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த இயந்திரங்கள் அனைத்தும் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வைத்து சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பெல் நிறுவன அதிகாரிகள் கோவை வந்து உள்ளனர். பேலட் இயந்திரங்களில் உள்ள கட்சி சின்னங்கள் அகற்றப்பட்டு, அதில் உள்ள பட்டன்கள் சரியாக வேலை செய்கிறதா? என்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இன்னும் சில நாட்களில்
நிறைவடைய உள்ளன. இதனைத்தொடர்ந்து கோவையில் உள்ள மொத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 5 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு மாதிரி ஓட்டு நடத்த தேர்தல் பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,
இந்த மாதிரி ஓட்டுப்பதிவின்போது பேலட் இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் சரியாக வேலை செய்கின்றதா என சரிபார்க்கப்படும். அதே போல் வி.வி.பேட் இயந்திரங்கள் பட்டன் அழுத்திய சின்னத்திற்கான ஒப்புகை சீட்டு வழங்குகிறதா மொத்த ஓட்டுகள், ஒப்புகை சீட்டுகள் சரியான எண்ணிக்கையில் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும்,’’ என்றனர்.