November 23, 2019
தண்டோரா குழு
மத்திய அரசின் தவறான கொள்கையை கண்டித்து கோவையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட மக்கள் பிரசாரம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி அண்மையில் அறிவித்திருந்தார். அதன் படி கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக கோவை மாநகர்,வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமையில் நடைபெற்ற இதில், சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மகாராஷ்டிராவில் அரசியல் படுகொலை நடைபெற்றுள்ளதாகவும், மகாராஷ்டிரா மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என கூறிய அவர்,எஸ்.பி.சி கவர் நீக்கப்பட்டது அரசியல் காழ்ப்புணர்ச்சி எனவும்,மத்தியில் ஆளும் பாஜகவின் கைபாகையாக தமிழக அரசு செயல்படுவதாகவும்,ஆண்டுக்கு இலட்சம் பேருக்கு மேலாக வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்த பாஜக அரசு , தற்போது பொருளாதார ரீதியாக கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், தவறான பொருளாதார கொள்கை முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது. தொழில்துறை, விவசாயம் முடங்கி இருக்கிறது. வங்கித்துறையும் மோசமான நிலையில் இருக்கிறது.,இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மோட்டார் வாகன உற்பத்தி வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், இதனால் இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக கூறிய அவர்,இதை மீட்டெடுக்க வேண்டியது காங்கிரசின் முக்கிய கடமை என தெரிவித்தார்.ஆர்ப்பாடத்தில் கோவை மாவட்ட தலைவர்கள் வி.எம்.சி.மனோகரன்,சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.