December 3, 2018
தண்டோரா குழு
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல், பொது சுகாதாரத்துக்கு பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், குழாய்கள் தீங்கு விளைவிப்பதாகவும் பிளாஸ்டிக் பொருட்களால், மழை நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்படுவதாகவும், கழிவு நீர் பாதைகளும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதாகவும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யபட்ட மனுவில் மக்கள் சுகாதாரமாகவும் அமைதியுடன் வாழ்வதற்கான அடிப்படை உரிமை பிளாஸ்டிக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிளாஸ்டிக்குக்கு மாற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கவும் கோரப்பட்டிருந்தது.
இம்மனு மீதான் விசாரணை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் கொண்ட அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, வருகிற டிசம்பர் 10ந்தேதி முதல் மதுரையில் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை விதிக்க உத்தரவிட்டனர். இந்த தடை உத்தரவை அமல்படுத்தும்படி மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவும் பிறப்பித்து உள்ளனர். இந்த தடையை மீறினால் ரூ.500 அபராதமும், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது மக்களும், வியாபாரிகளும் மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்த பழகிக் கொள்ளுமாறும் நிதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
தமிழ்நாட்டில் வரும் 2019 ஜனவரி 1 முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுகளை போன்ற அத்தியாவசிய தேவை தவிர மட்டற்ற எதிர்க்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு உபயோகிக்க கூடாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.